கடலூரில் சுற்றிவலைத்து கடைந்தெடுத்த போலீஸ்... கதறும் கம்யூனிஸ்டுகள்... காக்கிகள் அராஜகம் என அலறல்..

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 3:36 PM IST
Highlights

திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர். இதனை கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். 

கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சிபிஐ(எம்) தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாகவும், இது காவல்துறையின் அராஜக நடவடிக்கை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. இவ்வியக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது,  முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் 01.12.2020 அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர். காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர். இதனை கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.

மேலும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு புனைந்ததுடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. மாதவன், நகர செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றிய செயலாளர் ஜெ. ராஜேஸ்கண்ணன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ். தமிழ்மணி, நகர்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ஆகிய 6 பேரை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத, கண்மூடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

எனவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை தாக்குதல் நடத்தி, படுகாயம் ஏற்படுத்தி பின்னர் பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும், காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய கடலூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!