
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலாவை முன்மொழிந்தார். மேலும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதோடு தீர்மானம் நிறைவேற்றினர்.
இதை தொடர்ந்து 7ம் தேதி சசிகலா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
இதற்கிடையில், நேற்று இரவு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்த அவர், சசிகலா மீது சரமாரியாக புகார் செய்தார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நலையில், தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ஒ.பன்னீர்செல்வம் எப்போதுமே கட்சிக்கு துரேகம் செய்தது இல்லை. இப்போது மட்டும் அவர்கள் புதிதாக என் மீது குற்றச்சாட்டை கிளப்புவது ஏன். இதற்கு காலம்தான் பதில் செல்லவெண்டும்.
அம்மாவுக்கு சோதனைகள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம்,அவரது கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கு சிறு குண்டுமணி அளவுக்கு கூட களங்கம் விளைவிக்காமல் பணியாற்றினேன்.”
இடையில், பாஜக உங்களை இயக்குகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அப்படி இல்லை. வடிகட்டிய பொய்“ என திட்டவட்டமாக மறுத்தார்.
ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அந்த சந்தேகம் நிச்சயம் அனைவருக்கும் இருக்கிறது. சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதற்கு உறுதியாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை கமிஷன் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.