திமுக வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்று பேசினார். “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் 50 தொகுதிகளில் பிரசாரம் செய்து முடித்துவிட்டேன். அங்கெல்லாம் திமுக தொண்டர்கள் நிறைய தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது என்றனர். திமுக வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன்.
தற்போதுள்ள சூழலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். சென்னையில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் இரண்டு தொகுதியிலும் திமுக போட்டியிடும் என நான் உறுதியளிக்கிறேன். தலைவரிடம் அனுமதி பெறாமலேயே இதை கூறுகிறேன். நான் வெறும் ட்ரெயிலர்தான். திமுக தலைவர் வரும்போது அதிமுகவினர் துண்ட காணோம் துணிய காணோம் என ஓடப்போகிறார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.