நீலகிரி
நீலகிரி கூட்டுறவுச் சங்கத் தேர்ந்தலின்போது வாக்குச்சாவடிக்குள் அதிரடியாய் புகுந்த அதிமுக மற்றும் அமமுக-வினரை காவலாளர்கள் வெளியே அழைத்து வந்து அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அதிகரட்டியில் வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்தச் சங்கத்தில் மொத்தம் 1578 பேர் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நிலையில், கூட்டுறவு சங்க நிர்வாக குழுவுக்கு 11 பேர் கொண்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைப்பெற்றது.
இதில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க.வில் 11 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 11 பேரும், சுயேட்சைகள் 4 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல் வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று காலை அதிகரட்டியில் வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கத்தில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது வாக்குச்சாவடி முன்பு அ.தி.மு.க.வினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் திரண்டிருந்தனர்.
அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றார். இதனைப் பார்த்த அ.தி.மு.க.வினர் அவர்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல எப்படி அனுமதிக்கலாம்? என்று கூறி காவலாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அ.தி.மு.க.வினரும் வாக்குச்சாவடிக்குள் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின் இருதரப்பினரையும் காவலாளர்கள் வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படுவதற்குள் காவலாளர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர்.