இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும்… மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!! | MKStalin

By Narendran SFirst Published Nov 23, 2021, 3:37 PM IST
Highlights

#MKStalin | இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் திமுக அரசு, முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. அதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் 2வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவையில் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74835 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்பட்டது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. இது தவிர 13 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி, தமிழ்நாடு நிதி நுட்பகொள்கை 2021 ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், 5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிப்பதாகவும் அனைத்து முன்கள பணியாளர்களும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களை காப்பதுதான் அரசின் பணி என்றும் இதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.  5 மாதங்களில் இது 3 வது முதலீட்டாளர் மாநாடு என்றும் அரசின் மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர். ஜூலை, செப்டம்பர், நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். பல மாநில முதல்வர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக என் பெயரை சொல்கின்றனர்.

இது அரசுக்கு கிடைத்த பெருமையல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். பொள்ளாச்சி பகுதியில் 21 கோடியில் தென்னை நார் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக ஒரு தொழிலுக்கு என இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கு கோவை மையமாக இருக்கின்றது. பாராட்டத்தக்க நகரமாக கோவை உருவாகி வருகின்றது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக கோவை இருக்கின்றது. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.    

click me!