கொஞ்சம் கூட கோபம் குறையாத முதல்வர் ஸ்டாலின்.. ஒரம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன்..!

By vinoth kumarFirst Published Sep 30, 2022, 3:17 PM IST
Highlights

திமுக 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வான கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். 

கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீதான கோபம் முதல்வருக்கு இன்னும் குறையவில்லை என்பதை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பட்டியல் காட்டுகிறது. 

திமுக 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வான கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். அதற்கு பிறகு, சுரேஷ் ராஜனுக்கு திமுகவில் ஏறுமுகம்தான். அமைச்சரான பிறகு, திமுகவில் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிலிருந்து, சுரேஷ் ராஜன் 23 ஆண்டுகள் கிட்டத்தட்ட கால் நூற்றாடு காலம், திமுகவில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரானார் சுரேஷ் ராஜன். கட்சியைத் தாண்டி ஸ்டாலின் குடும்ப நண்பராகவும் இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், சுரேஷ் ராஜன் தோல்வியடைந்ததால், அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாமல் போனது. ஆனால், அதே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மேயர் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் தலைமை உத்தரவை மீறி சுரேஷ் ராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த தலைமை சுரேஷ் ராஜனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது. அந்த மாவட்ட செயலாளர் பதவி மேயர் மகேஷ்க்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பலமுறை நேரில் சந்திக்க சுரேஷ் ராஜன் முயற்சித்தார். ஆனால், முதல்வர் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் செயலாளர் - மனோ தங்கராஜிம்,  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் - மகேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், சுரேஷ் ராஜனை முதல்வர் மன்னித்து ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அவர் மீதான கோபம் குறையவில்லை என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது.  

click me!