இலங்கை தமிழர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. துள்ளி குதித்த வைகோ.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 10:42 AM IST
Highlights

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடும்பத்திற்கு 5 சமையல் எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசி இனி விலை இல்லாமல் வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைகோ பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார். நாடு இழந்து, வீடு இழந்து, உறவுகளை இழந்து, அனைத்தையும் இழந்து அநாதைகளாய், அகதிகளாய் முகாம்களில் தங்கள் வாழ்நாளை கடத்திக்கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழ் உறவுகளுக்கு மனிதநேய அடிப்படையில் பல்வேறு உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல், அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பு பயில்வதற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும் இவ்வாறே கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடும்பத்திற்கு 5 சமையல் எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசி இனி விலை இல்லாமல் வழங்கப்படும். முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், தமிழ்நாடு அரசு குடும்பம் ஒன்றுக்கு அதற்காக அளித்த தொகை 1790ஐ, 3473 என உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளான நம் உறவுகளுக்கு தாய் உள்ளத்தோடு தேவையான பல்வேறு உதவிகளை கடமை உணர்ச்சியோடு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால் என்று அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முன்பு குறிப்பிட்டார். அந்தத் தமிழ் ஈழ உறவுகளின் கண்ணீரைத் துடைக்கும் மனிதநேயப் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

முகாம்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள இயலாத நிலையில், அகதிகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளும் நாளேடுகளில் அவ்வப்போது வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையிலும் கவனம் செலுத்தி, முகாம்களில் தமிழ் ஈழ அகதிகள் நிம்மதியாக வாழ்ந்திடவும், இலங்கை செல்ல விரும்பும் ஒருசிலருக்கு அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

click me!