ஆளுநருடன் சேர்ந்து பிரதமரை வரவேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின்.. முதல்வர் வீட்டுக்கு பிரதமர் செல்வதாகவும் தகவல்.??

By Ezhilarasan BabuFirst Published May 24, 2022, 12:47 PM IST
Highlights

நெடுஞ்சாலைத்துறை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் வரும் 26ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 

நெடுஞ்சாலைத்துறை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் வரும் 26ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 26 ஆம் தேதி மாலை 5:10 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் பயண விவரம் பின்வருமாறு:-  26 ஆம் தேதி பிற்பகல் 3:55 மணி அளவில் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஐஏஎப் பிபிஜே விமானத்தில்  புறப்படும் பிரதமர் மோடி 5:10 அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவரை தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர்கள் பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

மாலை 5:15  மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக விழா நடக்கும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். அப்போது வழிநெடுகிலும் மக்களை அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

*ரூபாய் 760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்

*ரூபாய் 256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்றாவது பாதை பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

*ரூபாய் 450 கோடி செலவில் 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை-தேனி அகல பாதை திட்டம், தாம்பரம் செங்கல்பட்டு மற்றும் மதுரை தேனி வழி தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கிறார்,

*எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்டு செல்வதற்காக 1445 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 1, 760 கோடி மதிப்பில் எண்ணூர், திருவள்ளூர், பெங்களூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி இடையே திரவ இயற்கை எரிவாயு பைப்லைன் தடம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

*பெங்களூரு-சென்னை நான்கு வழி விரைவு சாலையில் மூன்றாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

*சென்னையில் அமைய உள்ள மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ஓசூர் தர்மபுரி இடையே இரண்டாம் மூன்றாம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

*மீன்சுருட்டி-சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

*சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.

இதுதவிர மத்திய நகர்ப்புற வீட்டுவசதி துறை மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின் நிகழ்ச்சி முடித்து மாலை 7.05 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து புறப்படும் பிரதமர் விமான நிலையம் செல்ல மூன்று வழிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையம் செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பிரதமர் தமிழக முதலமைச்சர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விமான நிலையம் செல்லும் பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளதாக தெரிகிறது பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து 7.40 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்கிறார். 
 

click me!