ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்... முதல்வர் பழனிசாமி கடும் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Apr 3, 2020, 2:36 PM IST
Highlights

ஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றித்திரிந்தால், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமீபத்திய தகவலின்படி, 2458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமூக தொற்றாக கொரோனா பரவுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனாவை தடுக்க வேறு வழியின்றி ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனா பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்துவருவதுடன், மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

ஊரடங்கால் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

மக்கள் ஊரடங்கால் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான், மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறிக்கடைகள் ஆகியவை திறந்துவைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்லலாம் என்ற தளர்வை தவறாக பயன்படுத்தி சிலர் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். 

அப்படி சமூக பொறுப்பின்றி பொதுவெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, ஊரடங்கை மீறி சுற்றுபவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவிலிருந்து மக்களை காக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, மக்களை கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. இதை புரிந்துகொண்டு கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும்.

கொரோனாவின் தாக்கம் குறித்த விழிப்புணர்வும் அதன் தீவிரத்தன்மை குறித்த புரிதலும் இல்லாமல் சிலர் ஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றுகின்றனர். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே அதை மீறி அதிகமானோர் சுற்றுவதை பார்த்தால், 144 தடை உத்தரவு மேலும் கடுமையாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
 

click me!