சென்னை தண்ணீர் பஞ்சத்துக்கு இது தான் காரணம் ! தடாலடி துரை முருகன் !!

By Selvanayagam PFirst Published Jun 19, 2019, 7:25 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதி நீரை முழுமையாக கேட்டுப் பெறாததே சென்னை குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் என திமுக பொருளாளரும், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தைச் சிலர் உருவாக்கியுள்ளனர். தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் சொல்வது வதந்தி என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். 

ஆனால் உண்மையில் சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் ஏராளமான விடுதிகள், ஐடி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெண்கள் குடங்களைத் தூக்கிக் கொண்டு தெருக்கிளில் அலைகின்றனர். நள்ளிரவிலும் குடிநீர் லாரிகள பின்னால் மக்கள் அலைந்து திரிகின்றனர். 

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அமைச்சர் வேலுமணி கூறியதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய  திமுக பொருளாளர் துரைமுருகன், இதைவிட ஜமக்காளத்தில் வடிகட்டிய பெரிய பொய் இருக்காது என்று கூறியுள்ளார். சென்னைக்கு ஆதிகாலத்தில் பூண்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அடுத்து புழல் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அப்போது இருந்த மக்கள் தொகைக்கு இரண்டும் சரியாக இருந்தது.

அதற்குப் பிறகு மக்கள்தொகை அதிகமான பிறகுதான் கிருஷ்ணாவிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்பட்டது. கருணாநிதியே ஆந்திராவுக்குச் சென்று சென்னா ரெட்டி, என்.டி.ராம ராவ், சந்திரபாபு நாயுடுவை நேரில் பார்த்துப் பேசி கிருஷ்ணா நீரைக் கொண்டுவந்தார். இப்போது நமக்கு வர வேண்டிய 12 டி.எம்.சி நீர் வரவில்லை. ஆனால், எந்த அமைச்சரும் தண்ணீர் கேட்டுப் பெறவில்லை” என்றார்.

சென்ற வருடம் ஆந்திராவில் நிறைய தண்ணீர் வீணானது. அப்போதே கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள் என்று கூறிய அவர், “ஆந்திராவிலிருந்து தண்ணீர் வாங்கி செம்பரம்பாக்கம் சோழவரம், போரூர் ஏரியை நிரப்பியிருந்தால் சென்னைக்கு இப்போது தண்ணீர் இருந்திருக்கும். 

ஆனால், இவர்கள் குவாரியில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரைக் கொண்டுவந்து தருவதாகச் சொல்கிறார்கள். ஈரோடு, திருச்சி, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டுவந்து தரலாம். தண்ணீர் கொண்டுவருவதற்கான புதிய திட்டம் எதையுமே இவர்கள் கொண்டுவரவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

click me!