எஸ்.பி. வேலுமணி மீதான முறைகேடு புகார்... திமுக தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Asianet TamilFirst Published Jan 7, 2020, 10:06 PM IST
Highlights

 திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அனைத்து ஆதாரங்களுடன் திமுக தொடுத்த இந்தப் புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறை மீது நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று வாதிட்டார். 

உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகாரின் விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சி உள்கட்டமைப்பு பணிகளில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக, அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிட்டது.  இந்நிலையில் இந்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


 திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அனைத்து ஆதாரங்களுடன் திமுக தொடுத்த இந்தப் புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறை மீது நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று வாதிட்டார். அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாநில அரசுத் துறை நடத்தும் விசாரணை நியாயமாக இருக்காது. வேலுமணிக்கு எதிராக புகார் அளித்து ஓராண்டு ஆகியும் ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கி முடிக்கவில்லை” என வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், “ஆரம்பக்கட்ட விசாரணை முடிந்து, அது தொடர்பான அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீது மேற்கொண்டு அவர்தான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனையடுத்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

click me!