மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். ஜெயலலிதா நீண்ட காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மரணமடைந்திருந்தாலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டிய பலர் இதுவரை ஆஜராகாததால், ஆணையத்தின் விசாரணைக் காலமானது நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறி, ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி, தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து, ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தது. அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருமே ஆவலுடன் காத்திருக்கும் ஜெயலலிதா மரண வழக்கில் 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு சற்றே அதிர்ச்சியான விஷயமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.