Chennai Floods | ஸ்டாலின் எட்டடி பாய்ந்தால், 36 அடி பாயும் உதயநிதி… கொட்டும் மழையில் தந்தை, மகன் கள ஆய்வு!

By manimegalai aFirst Published Nov 10, 2021, 7:49 PM IST
Highlights

வாரிசு அரசியல் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தாலும், அடுத்தடுத்த செயல்பாடுகளால் தமக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

வாரிசு அரசியல் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தாலும், அடுத்தடுத்த செயல்பாடுகளால் தமக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நான்கு நாடளாகியும் சென்னையில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். விட்டு விட்டு தொடரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் மாறிவிடுகிறது. சென்னையின் முக்கிய நகர்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்து அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களை கடந்துவிட்டதால், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆளும்கட்சியே காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் அலட்சியப் பணிகள், டென்டர்களில் நடைபெற்ற ஊழல்களே இன்றைய அவலநிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சாடியுள்ளனர். முதலில் மழை பாதிப்புகளை சரிசெய்வது, அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களை தண்டிப்பது என்ற குறிக்கோளுடன் வெள்ள மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கனமழை பாதிப்புகளை சரிசெய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வு செய்தார். சென்னையில் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரே களத்தில் இறங்கி பணிகளை மேற்கொள்வதால் அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகலாக வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக-வினரும், மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும், தமக்கு தந்தையுமான ஸ்டாலின் இட்ட கட்டளையை ஏற்று நடிகரும், சேப்பாக்கம் தொகுதியுமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக மழையால் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மின் மோட்டார் மூலம் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீர் அகற்றப்படுவதை பார்வையிட்ட உதயநிதி, தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவரணத் தொகுப்பை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதையடுத்து சிந்தாதரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெருவில் ரிச்சித் தெரு குடிசைப்பகுதியில் ஆய்வு செய்த உதயநிதி, அங்குள்ள மக்களுக்கு பால், போர்வை அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார். மேலும் அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று பாதுகாப்பாக இருக்கும்படியும் பொதுமக்களிடம் உதயநிதி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி கட்சியினரோடு இணைந்து நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகக் கூறினார். மின்தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, மழை நீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய பின்னர் மின் விநியோகம் சீராகும் என்று அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வுகளின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மற்றும் திமுக பிரதிநிதிகள் உடனிருந்தனர். கொட்டும் மழையில் தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

click me!