
விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டுள்ளார் என்றும், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளார் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விஷால் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.