
தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்ர்கள் உள்ளிட்ட அனைவரும் 2 நாள் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கு நிதியாக அளிக்க வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் தனது கட்சியினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் இன்று முதல் வருகிற 21-ந்தேதிவரை தெலங்கானா கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஏதாவது 2 நாட்களை தேர்வு செய்து கூலி வேலை செய்ய வேண்டும் என்றும் அதில் கிடைக்கும் கூலியை வரும் 21-ந்தேதி நடைபெறும் கட்சி மாநாட்டில் அளிக்க வேண்டும் என்றும் சந்திர சேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தெலுங்கானா மாநிலத்தின் இதயப் பகுதியான வாரங்கல்லில் வரும் 21 ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் சந்திரசேகரராவ் தெரிவித்தார்.
தானும் 2 நாட்கள் விவசாயிகளுடன் இணைந்து கூலி வேலை செய்யவுள்ளதாகவும் எங்கே எப்போது? என்பதை பின்னர் தெரிவிப்பேன் என்றும் சந்திரசேகரராவ் கூறினார்.
2014 ஆம் ஆண்டு 52 லட்சமாக இருந்த தெலங்கானா ராஷ்ட்டிரய சமீதி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சமாக அதிகரித்து இருப்பதாகவும்,.35 கோடி ரூபாய் நிதி இருப்பதாகவும் சந்திரசேகரராவ் தெரிவித்தார்.