பாஜகவை வீழ்த்தியே தீருவோம்…. சபதமேற்ற சந்திரபாபு நாயுடு - ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Nov 9, 2018, 8:56 PM IST
Highlights

இந்தியாவில் பாஜகவை வீழ்த்தி  ஒரு மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றும், அதற்காக எதிர்க்கட்கிள் அனைத்தையும் ஒன்றிணைப்போம் எனவும்  ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

பா.ஜ.,வுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளார். இவர்களை தொடர்ந்து, ஸ்டாலினை சந்தித்து பேச, இன்று சந்திரபாபு நாயுடு, சென்னை வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற அவர், ஸ்டாலினை சந்தித்தார். இருவரும், நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, தேசிய அளவில், மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என்றும், எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாஜக அரசு ஆர்பிஐ, சிபிஐ போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும், இந்த ஆட்சியை வீழ்த்துவது தொடர்பாக ராகுல், தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்நது மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து மறைந்த கருணாநிதியுடன் தனக்கு நெருக்கமான உறவு இருந்தது என்றும், தற்போது பாஜக ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் என்றும் சந்திரபாபு நாயுடு  தெரிவித்தார்.

click me!