காவிரி வரைவுத் திட்டத்தை மே மாதம் 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு கால அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை தாக்கல் மனுவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.
அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள நிலையில், தற்போது திடீரென மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வழக்கறிஞர் வேனுகோபாலின் ஆலோசனையை அடுத்து மனு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது