மாட்டிறைச்சி தடை.. திரும்பப்பெற மத்திய அரசு முடிவு..?

First Published Nov 30, 2017, 11:41 AM IST
Highlights
central government discuss to return cow sale ban order


இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதித்திருந்த தடையை திரும்பப்பெறுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. மாடுகளை விற்பனை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. விவசாயத்திற்காக மட்டுமே மாடுகள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது எனவும் மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. இதனால், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினர், மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்துவந்தனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாட்டிறைச்சி சாப்பிடுவோர், மாடுகளை வளர்ப்போர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு போராட்டங்களும் நடத்தின.

மத்திய அரசின் இந்த உத்தரவால், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், பலர் நாடு முழுவதும் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றினர். இந்த வன்முறை சம்பவங்களில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், பலர் அரங்கேற்றிய வன்முறை சம்பவங்கள், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் மத்திய அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக மக்கள் தங்களது கருத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த ஆணையை திரும்பப்பெறுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இது மாட்டிறைச்சி உண்ணுவோர் மத்தியிலும் மாடு வளர்ப்போர் மத்தியிலும் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!