கறுப்பர் கூட்டத் தலைவன் வங்கி கணக்கில் பிரபல கட்சியின் நிதி..! விறுவிறுக்கும் போலீஸ் விசாரணை..!

By Selva KathirFirst Published Jul 25, 2020, 4:15 PM IST
Highlights

கறுப்பர் கூட்டத் தலைவராக அறியப்படும் நபரின் வங்கிக் கணக்கில் பிரபல அரசியல் கட்சி தொடர்புடைய நபர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பணம் அனுப்பப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கறுப்பர் கூட்டத் தலைவராக அறியப்படும் நபரின் வங்கிக் கணக்கில் பிரபல அரசியல் கட்சி தொடர்புடைய நபர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பணம் அனுப்பப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானை இழித்தும் பழித்தும் வீடியோ வெளியிட்ட புகாரில் கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை துவங்கிய செந்தில்வாசன் எனும் நபர் முதலில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வீடியோவில் முருகனை ஆபாசமாக பேசிய சுரேந்திரன் சரண் அடைந்தான். பிறகு கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் வீடியோக்கள் அனைத்தையும் சைபர் கிரைம் போலீசார் நீக்கினர்.

கறுப்பர் கூட்டம் சேனலை தடை செய்வதற்கு தமிழக போலீசார் யூ ட்யூப் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கறுப்பர் கூட்டம்  நிர்வாகிகள் மற்றும அந்த சேனலின் வங்கிக் கணக்குகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கறுப்பர் கூட்டத்திற்கு தலைவன் என்று கூறப்படும் நபரின் வங்கிக் கணக்கு தான் அவர்களின் யூ ட்யூப் சேனலுக்கான வங்கிக் கணக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த வங்கிக்கணக்கில் நடைபெற்ற டிரான்சாக்சன் விவரங்களை போலீசார் பெற்றுள்ளனர். அதில் யூ ட்யூப் நிறுவனம் மாதம் மாதம் அனுப்பும் விளம்பர வருமானம் மட்டும் இன்றி வேறு சிலரும் பணம் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த வங்கிக் கணக்கில் கணிசமான தொகை தொடர்ச்சியாக வேறு ஒரு கணக்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்பிய கணக்கிற்கான உரிமையாளர் ஒரு நிறுவனத்தின் பெயரில் கறுப்பர் கூட்டத்திற்கு பணம் அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கறுப்பர் கூட்டத்திற்கு பணம் அனுப்பிய அந்த நபர் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சி ஒன்றுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. எதற்காக அந்த நபர் கறுப்பர் கூட்டம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்தே தற்போது சிறையில் உள்ள செந்தில்வாசன், சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் காவலுக்கு செந்தில்வாசன் வந்த பிறகே வங்கி கணக்கில் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்த நபரிடம் இருந்து பணம் வந்ததற்கான காரணம் அம்பலமாகும் என்கிறார்கள்.

click me!