
விழுப்புரத்தில் அனுமதி இல்லாமல்ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுவிக்கக் கோரியும் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்த பிறகு ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை மறந்துவிட்டார். அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்றே 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசு செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டிய ஜெயக்குமாரை கைது செய்திருக்கிறார்கள். கைதுகளுக்கு அதிமுக என்றுமே அஞ்சியது கிடையாது. பலமுறை சிறையைப் பார்த்தவர்கள்தான் அதிமுகவினர். என்னை கைது செய்ய வாருங்கள். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். மேலும், திமுக குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது போய் பொன்முடியை வரச்சொல்லு. பொன்முடி இல்ல, ஸ்டாலினை வரசொல்லு... நான் கேட்கின்ற கேள்விக்கு ஸ்டாலினை பதில் சொல்ல சொல். யாரை மிரட்டி பார்க்கிற. வேடிக்கை பார்க்கும் காவல்துறையே, இந்த மிரட்டலுக்கு இந்த சண்முகம் பயப்படமாட்டான். இரவு 12 மணி வரை இங்கு நிற்கிறேன், திமுக-வினருக்கு தைரியம் இருந்தால் வாங்க பார்க்கிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.