
கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகார்தாரரும் காணொலி காட்சியில் ஆஜரானார்கள்.
அப்போது சமசரம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்கறிஞர்கள் நல நிதியதிற்கு 50,000 ரூபாய் செலுத்த வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், இந்த வழக்கில் இருந்து ராஜேந்திர் பாலாஜி தப்பித்தாலும் அவர் மீது இன்னும் பணமோசடி உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.