போதை இல்லா தமிழகம் சொன்னா மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் முதல்வரே.. விஜயகாந்த் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Aug 12, 2022, 6:37 AM IST
Highlights

 அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? 

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும்  என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். முதல்வரின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- கோயில் காணிக்கை நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.! தங்க முதலீட்டு பத்திரத்தை வழங்கிய முதலமைச்சர்

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

அதேபோல் மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனம் இல்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

இதையும் படிங்க;- மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்கும் நான்... கவலையோடு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்துள்ளேன்..! மு.க.ஸ்டாலின்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும்  என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!