234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் ரெடி.. உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட்.. அதிரடிக்கு தயாராகும் எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Dec 9, 2020, 1:27 PM IST
Highlights

திமுகவிற்கு இணையாக சத்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை துவக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவிற்கு இணையாக சத்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை துவக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா பாணியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை துவக்குவது தான் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய வியூகம் என்கிறார்கள். அதே சமயம் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க உள்ளார்கள், காங்கிரஸ் சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதோடு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்தும் உளவுத்துறை மூலமாக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தகவல்கள் சேகரித்து வருவதாக சொல்கிறார்கள்.

களத்தில் திமுகவை எதிர்த்து வெல்வதை விட அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளை எளிதாக வென்றுவிடலாம் என்பது தான் கடந்த 2016 தேர்தல் அதிமுகவிற்கு புகட்டிய பாடம். கடந்த தேர்தலில் திமுக – அதிமுக நேருக்கு நேராக போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்த முறையும் இதே பாணியில் முடிந்த அளவிற்கு திமுகவுடன் நேரடியாக மோதுவதை விட காங்கிரஸ் போன்ற திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தும் வியூகமும் முதலமைச்சரிடம் உள்ளது.

நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பித்த பிறகு ஏற்படும் தாக்கத்தை பொறுத்த கூட்டணி பேச்சுவார்த்யை தீவிரப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். முடிந்த அளவிற்கு கூட்டணியை இறுதி செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் இதர பணிகளில் ஜனவரி இறுதி முதல் கவனம் செலுத்தினால் தான் திமுகவிற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். இதற்கு ஏற்ப கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உத்தேச வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயாரித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

தற்போதைய அமைச்சர்களுக்கு அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, மறுபடியும் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் வெற்றி கிடைக்குமா? இதே போல் சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்களில் யார் யார் தொகுதியில் நல்ல பெயருடன் உள்ளனர் என்கிற விவரங்களை உளவுத்துறை மூலம் சேகரித்து வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிலும் தொகுதிக்கு 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களின் பின்புலம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்பு குறித்து உளவுத்துறை தற்போது தகவல்களை சேகரித்து வருவதாக கூறுகிறார்கள்.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் வியூகம் வகுத்து வரும் சுனில் டீமும் தமிழகம் முழுவதும் தனியாக சர்வே எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் சர்வேக்களின் அடிப்படையில் தான் இந்த முறை வேட்பாளர் தேர்வு இருக்கும் என்கிறார்கள். கடந்த முறை திமுக பின்பற்றிய அதே முறையைத்தான் இந்த முறை அதிமுக பின்பற்ற உள்ளதாம். மற்றபடி ஜெயலலிதா இருந்த போது இருந்த நேர்காணல், விருப்ப மனு தாக்கல் போன்றவை எல்லாம் சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும் என்று சொல்கிறார்கள்.

மேலும் தற்போதைய சூழலில் 234 தொகுதிகளுக்கும் தலா மூன்று வேட்பாளர்கள் என்று உத்தேச பட்டியல் ரெடியாகியுள்ளதாம். இந்த பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏ பலர் மிஸ் ஆவதுடன் அமைச்சர்கள் சிலரும் கூட மிஸ் ஆவதாக கூறுகிறார்கள். எனவே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது அதிமுகவில் ஒரு பூகம்பமே வெடிக்கலாம் என்றும் ஆனால் அதனை எல்லாம் எதற்கொள்ள தற்போதே தகுந்த ஏற்பாடுகளுடன் எடப்பாடி தரப்பு தயாராகி வருவதாகவும் அதிமுக வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!