நீட் தேர்வை ரத்து செய்யணும்.. எந்த நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

By vinoth kumarFirst Published Jun 6, 2021, 10:40 AM IST
Highlights

தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும்.எனது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதில் தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில்  கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நுழைவுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்;- கடந்த 4-ம் தேதியன்று, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசைப் பொறுத்தவரை 12-ம் வகுப்புத் தேர்வுகளின் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்பினை மாணவர்கள் பெற வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தற்போதைய சூழலைக் கருதி நாங்களும் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறோம்.இங்கேயும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொழில்முறை, கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். இந்த முடிவு மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்பது அவர்களின் உடல்நலத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். எந்தக் காரணத்துக்காக நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைத்திருக்கிறோமோ, அதே காரணம் நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும்.

தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும். எனது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதில் தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்'' என முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

click me!