2ஜி கேஸில் கனிமொழி பின்னால் உங்கள் குடும்பம் ஒளிந்ததை விவாதிக்கலாமா.? உதயநிதிக்கு காய்த்ரி ரகுராம் சவால்.!

By Asianet TamilFirst Published Apr 2, 2021, 10:05 PM IST
Highlights

கலைஞர் டி.வி.யில் எப்போதோ டைரக்டராக இருந்து ராஜினாமா செய்துவிட்ட உங்கள் அத்தை கனிமொழி மீது பழியை போட்டுவிட்டு, அவர் பின்னால் உங்கள் மொத்த குடும்பமும் ஒளிந்து கொண்டு தப்பித்தது குறித்து விவாதிக்கலாமா என்று திமுக உதய நிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
 

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுகவின் குடும்ப அரசியலை சாடினார். உதயநிதி, ஸ்டாலின் மகன் என்பதாலேயே குறுக்குவழியில் மேலே வருவதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, அதனால் திமுக மூத்த தலைவர்களே அதிருப்தியில் இருப்பதாகவும் பேசினார்.

பிரதமர் மோடியின் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘நான் குறுக்குவழியை கடைபிடிக்கிறேன் என்று சொல்வது யாரென்று பார்த்தீர்களா? மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, பல பேரை எவ்வாறு ஓரங்கட்டினார் என்பது எங்களுக்கு தெரியும். மோடி ஓரங்கட்டிய தலைவர்களின் மொத்த பட்டியலும் என்னிடம் உள்ளது என்றார் உதயநிதி.
பாஜக மூத்த தலைவரான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை பெயர்களை குறிப்பிட்டு பேசிய உதயநிதி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோருக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலேயே அவர்கள் இறந்தார்கள் என்று ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணத்திற்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டினார் உதயநிதி. பிரதமர் மோடியின் மீதான உதயநிதியின் குற்றச்சாட்டால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மகள்கள், உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மோடியை விமர்சனம் செய்த உதய நிதியைக் கண்டித்து பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதில், “சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி பற்றி பேசும் உதயநிதியே, 2ஜி வழக்கில் சாஹித்பாவ்லா உங்கள் தந்தை ஸ்டாலினை 2 முறை சந்தித்த ரகசியத்தை காப்பாற்ற தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்ட சாதிக்பாட்சா குறித்து விவாதிக்கலாமா? அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டது குறித்து பேச தயாரா? என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தை கனிமொழி மீது பழியை போட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு உங்கள் குடும்பம் தப்பித்த கதைக்கு விளக்கம் இருக்கா உங்களிடம்? விவாதிக்க நான் தயார்!நீங்கள் தயாரா உதய நிதி?

— Gayathri Raguramm (@BJP_Gayathri_R)

மேலும், “கலைஞர் டி.வியில் எப்போதோ டைரக்டராக இருந்து ராஜினாமா செய்துவிட்ட உங்கள் அத்தை கனிமொழி மீது பழியை போட்டுவிட்டு, அவர் பின்னால் உங்கள் மொத்த குடும்பமும் ஒளிந்து கொண்டு தப்பித்தது குறித்து விவாதிக்கலாமா? பலன் அடைந்தது ஒருத்தர் பலிகடா ஆக்கப்பட்டது ஒருத்தர் என்பது போல் உங்கள் அத்தை கனிமொழி மீது பழியை போட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு உங்கள் குடும்பம் தப்பித்த கதைக்கு விளக்கம் இருக்கா உங்களிடம்? விவாதிக்க நான் தயார்! நீங்கள் தயாரா உதயநிதி?” என்று காய்த்ரி ரகுராம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

click me!