என்னை கை நீட்டி யாராவது குற்றம் சொல்ல முடியுமா..? கேட்கிறார் வைகோ..!

By Asianet TamilFirst Published Mar 24, 2021, 9:30 PM IST
Highlights

அம்பானி, அதானி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் அனில் அகர்வால் ஆகியோருக்காகத்தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
 

தமிழக சட்டப்பேரவைத் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. அக்கூட்டணியில் மதிமுகவுக்கு 6  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 6 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சாத்தூரில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ரகுராமனை வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்டி வதைக்கும் குளிரில் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டாரா? கொஞ்சம்கூட கவலைப்படவில்லையே. அம்பானி, அதானி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் அனில் அகர்வால் ஆகியோருக்காகத்தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களைப் பற்றிதான் நினைக்கிறார்.
வைகோ இந்தத் தவறைச் செய்தார், இன்னார் இடத்தில் காசு கேட்டார் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நேர்மையான அரசியலை நான் நடத்தியிருக்கிறேன். அதனால் உங்களிடம் உரிமையோடு வாக்குக் கேட்டு இங்கே வந்திருக்கிறேன்.” என்று வைகோ பேசினார்.
 

click me!