அதற்குள் தமிழகத்தில் ரவுடியிசம் தலைதூக்க தொடங்கிவிட்டது... ஸ்டாலின் அரசை காய்ச்சி எடுத்த செல்லூர் ராஜூ..!

By Asianet TamilFirst Published May 29, 2021, 9:35 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு ஓரளவு கைகொடுத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
 

மதுரையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும் மாஜி அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடியே கிடக்கின்றன. எனவே, அங்கு தடுப்பூசி மையங்கள் அமைத்து கூலித்தொழிலாளர்கள், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனா எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஓரளவு கைகொடுத்திருக்கிறது. ஆனால், வெறும் முழுஊரடங்கு மட்டுமே கொரானாவுக்கு தீர்வாக அமையாது.


தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கமே இல்லை. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குக் கூடுதலாக ரூ. 5000 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். தற்போதைய நிலையில் முந்தைய ஆட்சியைக் குறை சொல்வதெல்லாம் சரியாக இருக்காது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கொரோனா மரணங்கள் அதிகரித்தன. கொரோனா நோய்த்தொற்று காட்டுத்தீ போல பரவியது. திமுக ஆட்சியில்தான் கொரோனா மரண எண்ணிக்கையும் கூடியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் இல்லை. அதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. எங்களை விமர்சிப்பதற்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் பார்த்து பேச வேண்டும். இதிலிருந்து அவர் அமைச்சர் என்கிற தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இந்த ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்கள் பீதியடைவார்கள் என்பதற்காக கொரோனா உண்மைகளை மறைக்கிறறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர்செல்வம் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுகிறார்கள். இருவரும் கட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் வரும் என எல்லோருக்குனே தெரியும். அதிமுக ஆட்சியில் அதிகாரிகளிடம் எந்தப் பிரச்சனைக்காகவும் நாங்கள் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். ஆனால், இங்கே திமுக பிரமுகர் தலையீட்டில் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுவிட்டார். திமுக ஆட்சியின் தேனிலவே இன்னும் முடியவில்லை. அதற்குள் ரவுடியிசம் தலைதூக்க தொடங்கிவிட்டது” என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

click me!