எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டப்பெயர்... இனிமேல் முதல்வரை இப்படித்தான் அழைப்பாரம் டி.டி.வி.தினகரன்..!

By vinoth kumarFirst Published May 9, 2019, 12:40 PM IST
Highlights

ஆட்சியை கலைக்க அமமுக-திமுக இடையே மறைமுக கூட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்செல்வன் தெரிவித்ததாக டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்சியை கலைக்க அமமுக-திமுக இடையே மறைமுக கூட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்செல்வன் தெரிவித்ததாக டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் கூறி வருகின்றனர்.

  

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேனியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் ’’திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். ஆனால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம்’’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமி தி.மு.க.-அ.ம.மு.க. இணைந்து செயல்படுவது தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து, நேற்று 2-வது நாளாக சூலூர் தொகுதியில் டிடிவி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியையும், முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். பின்னர் அமமுக-திமுக இடையே உறவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்ச்செல்வன் கூறினார் என்று டிடிவி விளக்கம் அளித்துள்ளார்.

  

மேலும் அவர் பேசுகையில் ’’கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். இல்லை என்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னை முதல்வராக்கி இருப்பார். எடப்பாடி பெரிய பில்கேட்ஸ் போல காதோடு மைக் மாட்டி பேசி வருகிறார். 23-ம் தேதி எடப்பாடி ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு எட்டப்பனைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இப்போது இரண்டு எட்டப்பன்களை நான் பார்க்கிறேன்’’ என்றார்.

 

அதிமுக முதல்வர், துணைமுதல்வர் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை எல்லோரும் வளையல் போடுவதுபோல கையெல்லாம் கயிறு கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று சொன்ன தே.மு.தி.க-வுடனும், ஜெயலலிதா குற்றவாளி அவர்களுக்கு எதுக்கு மணிமண்டபம் என்று கேட்ட பா.ம.க-வுடனும் கூட்டணி வைத்துள்ளார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால், 3 எம்.எல்.ஏ-க்களுக்கு அவசர அவசரமாக நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது. இனி எடப்பாடி பழனிசாமியை நோட்டீஸ் பழனிசாமி என்றுதான் கூற வேண்டும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

click me!