பேருந்து கட்டணம் இலவசம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published May 7, 2021, 1:13 PM IST
Highlights

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை பெற்று மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அனைத்து முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்வருமாறு:  

கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரசு குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு சுமார் 2,07,67000  குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153, 39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரணத்தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். 

தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் 1க்கு 3 ரூ வீதம் 16-5-2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் முறையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும், பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான 1, 200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி  அரசு ஈடுகட்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை பெற்று மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற வாக்குறுதி அளித்துள்ளார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மற்றும்  தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னல்களைக் குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். என அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!