தமிழ்க் கடவுள் முருகனுக்காக களமிறங்கிய பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன்...!! அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2020, 8:17 PM IST
Highlights

வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

தமிழக் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் செயல்களை சுரேந்திர நடராஜன் என்பவர் வீடியோ பதிவுகளாக “கருப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். ஆபாச புராணம், கந்த சஷ்டி-12, என்ற தலைப்புகளில் இவர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். 

பல கோடி மக்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தி, தமிழகத்தில் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் சுரேந்திர நடராஜனின் செயல்பாடுகளின் பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசம் என்பது ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் தினசரி ஒலிக்கும் சிறந்த பக்தி பாடலாகும். கந்த சஷ்டி கவசத்தைக் கேட்கும் போதே தமிழ் மக்களின் மனதில் ஏற்படுகிற மன அமைதியை, இறை நம்பிக்கையை, இவர் கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ,தைப்பூச பண்டிகை நாட்களில் கடுமையான விரதம் இருந்து , தமிழ்க் கடவுள் முருகனுடைய அறுபடை வீடுகளை நோக்கி , கோடிக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்று முருகனை தரிசனம் செய்கிறார்கள். மேலும் சஷ்டி காலத்தில்  லட்சோப லட்ச முருக பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து தமிழ்க் கடவுள் முருகனை தரிசித்து வருகிறார்கள். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். 

சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நானும் எனது வீட்டின் முன்பாக நடக்கும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறேன். இதே போன்று, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்களும் , இறை நம்பிக்கை உள்ள அனைவரும், அவரவர் வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். முருக பக்தர்களின் மனம் புண்படக்கூடிய வகையில் செயல்படுபவர்கள், யாருடைய பின்புலத்தில் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில், ஒடுக்குவதில், பா.ஜ.க உறுதியாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

click me!