நடிகர் கமலஹாசன் இப்போது அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அதிகமாக சர்ச்சைக்கு ஆளாகும் மனிதர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் அதிரடியாக ட்விட்டரில் பதிவிடும் குறுஞ் செய்திகளுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தாலும் பல அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் பிரபல இதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்து வலதுசாரியிலும் தீவிரவாதம் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த விஷயம் கமலஹாசனுக்கு பெரிய அளவில் சர்ச்சையை உண்டாகியுள்ளது.
இந்த கட்டுரையில் கமல் எழுதி இருப்பது...
”கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். 'எங்கே ஓர் இந்து தீவிரவாதியை காட்டுங்கள்' என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது" என கமல் கூறியுள்ளார்.
கமலின் இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த தலைவர் 'வினய் கட்டியர்' இப்படி ஒரு கருத்தை எழுதியதற்காக 'கமல்' மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்து மதத்தவராய் இருந்துக்கொண்டு தன் மதத்தை இப்படி இழிவு படுத்திய இவருக்கு 'மனநிலை சரியில்லை ' என்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.