திமுகவுக்கு வாடிக்கையே இதுதான்...தெரியாதா ? எதை சொல்கிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன் ?

By Raghupati RFirst Published Dec 26, 2021, 8:27 PM IST
Highlights

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது,நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசுகையில், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த பகுதியில் இருந்த திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் என்பவரும் மற்றும் சில திமுகவினரும் மேடை மீது திடீரென்று ஏறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் பேசினர். இதனால் இரு கட்சி தரப்பினருக்கு மத்தியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு,மேடையில் இருந்த மைக் செட் கீழே தள்ளப்பட்டது.

மேலும்,நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டமும் பாதியில் ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக,மொரப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,திமுகவினரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கருத்துக்கு,கருத்தை தான் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வன்முறை கூடாது என்றும்,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

இந்நிலையில்,திமுகவினரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றுதான் கருத்து சுதந்திரத்தை பலி கொடுப்பது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில்,செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், ‘திமுக கட்சிக்கு இது ஒரு வாடிக்கையான செயல்.திமுக இதை செய்யவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்.திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றுதான் கருத்து சுதந்திரத்தை பலி கொடுப்பது,அவமதிப்பது.

குறிப்பாக ஒருவர் கருத்து சொல்கிறார் என்றால் அவர்களை கைது செய்வது. திமுக கட்சியினர் கருத்து சொல்லும்போது அமைதியாக இருக்கும் அரசு,மாற்று கட்சியினர் கருத்து சொல்லும்போது அவர்களை தாக்குவது,கைது செய்வது என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு சவாலாகதான் நான் பார்க்கிறேன்.திமுகவை சார்ந்தவர்கள் மற்றவர்களை தாக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.கருத்து சுதந்திரம் விசயத்தில் மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இதுபோன்று நிறைய நடக்கப்போகிறது.அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’ என்று கடுமையாக திமுகவை விமர்சித்தார் எல்.முருகன்.

click me!