பிறந்தநாள் அதுவும் கம்பத்தில் கட்டிப் போட்டு நண்பர்கள் செய்த காரியம்..!! சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2020, 12:45 PM IST
Highlights

கிருஷ்ணகிரி அருகே நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து அவர் மீது கலர்பொடிகள் தூவி, முட்டைகளை வீசி சக நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து அவர் மீது கலர்பொடிகள் தூவி, முட்டைகளை வீசி சக நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக வீடுகளில் உற்றார், உறவினர், குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து தான தர்மங்கள் செய்து பிறந்தநாள் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய தலைமுறையினர் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவதும், தங்களது நண்பர்களுடன் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடுவதும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இப்படி ஆபத்தான வகையில் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள நொச்சிப்பட்டி கிராமத்தில் இளைஞர் ஒருவரது பிறந்த நாளை அவரது நண்பர்கள் கொண்டாடிய விதம் வினோதமாக இருந்தது. அதாவது நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராபிண்சிங் என்பவரது பிறந்த நாளை அறிந்த அவருடைய நண்பர்கள், பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட்டனர், அந்த ஆலோசனைக்குப் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டம் உண்மையிலேயே வினோதமாக அரங்கேறியது. அதாவது, அவருடைய நண்பர்கள் நேற்று இரவு ஒன்று கூடி கிராமத்திலேயே கேக் வெட்டினர். பின்னர் தனது நண்பனை அருகில் இருந்த மின் கம்பத்தில் இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து பின்பக்கமாக கட்டி வைத்தனர். முதலில் நண்பர்கள் ஒவ்வொருவராக முட்டைகளை அவர் மீது உடைத்தனர். 

முட்டையை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பர்கள் உற்சாக மிகுதியால் விதவிதமான கலர்பொடியை தன் நண்பனின் மீது பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் தொடர்ந்து முட்டைகளை தலையில் உடைத்து உடல் முழுவதும் அபிஷேகம் செய்தனர். இந்த முட்டை மற்றும் கலர்பொடிகள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அவரது கைகளை அவிழ்த்து விட்டனர். இப்படித்தான் இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேறி முடிந்தது. அன்பைக்கூட வன்முறையாக வெளிப்படுத்தும் இந்த இளைஞர்களின் நடவடிக்கையை பலர் பல வகையில் விமர்சித்து வருகின்றனர்.  

 

click me!