பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் அரசு இ.சேவை மையங்களிலும், வீடுகளில் கணினிகளிலும் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் பிறப்பு, இறப்பு தகவல்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது.கிராமப்புறப் பகுதிகளில் பஞ்சாயத்துகளில் பதிவு செய்து, பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெறும் நிலை தொடர்கிறது.
தற்போது மாநிலம் முழுவதும் ஆன்-லைனில் சான்றிதழ்களை பெறும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.அதில், கையில் எழுதப்பட்ட சான்றிதழையோ அல்லது அரசால் வரையறுக்கப்பட்ட மென்பொருளை தவிர்த்து வேறு வகையான மென் பொருளிலோ சான்றிதழ்கள் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அனைவருக்கும் பொதுவாக மென் பொருள் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பை கண்காணிக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் புதிய மென் பொருளுடன் இணைக்கப்படும். எனவே பொது சுகாதாரத்துறையும் பதிவாளர் அலுவலகம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு மட்டுமே சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. எனவே வேறு மென்பொருள் கள் வழியாகவும் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது மக்கள் இ-வேசை மையங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் தங்கள் கம்யூட்டர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.