இது ஜனநாயக உரிமை.. பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 1, 2021, 6:57 PM IST
Highlights

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என்று கூறி பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என்று கூறி பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன போராட்டம்  நடைபெற்றது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது, பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்கள் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் சிபிஎம் பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், மாநில குழு உறுப்பினர் குமார் மற்றும் சிபிஐ மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் ஜுன் 7ஆம் தேதி ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்கு தடைவிதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வாதிட்டார். இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

click me!