கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலை கதிகலங்க வைத்த நாகரிகமான வார்த்தை (குறிப்பு: புதிய நாகரிகமான அரசியல் வார்த்தை) என்றால் அது “impotent” இது எங்கிருந்து எதற்காக வந்தது? ஆமாம், தினகரனின் வெற்றியை அடுத்து அதிமுகவின் அவசர கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக “காலம் கடந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதால், எடப்பாடி - ஓபிஎஸ் ஆண்மை இல்லாதவர்கள் (Impotent)" என்று ஆர்எஸ்எஸ் பிரமுகரும், பாஜக பினாமி எடப்பாடி அரசின் எஜமானர் என்று கருதப்படுபவரும், சுப்பிரமணிய சுவாமியால் 'மைலாப்பூர் லாபி' என அழைக்கப்பட்டவருமான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டார்.
குருமூர்த்தியின் இந்த பதிவிற்கு அதிமுக ஐடி அணியிலிருந்து மிரட்டல் பதிலும் கிடைத்தது. இதனையடுத்து ஆளும் மத்திய அரசின் சொந்தக்காரரான ஆடிட்டரையே அலறவைக்கும் அளவிற்கு களத்தில் குதித்தார் அமைச்சர் ஜெயக்குமார், “impotent” என்ற வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்? நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா? யாருக்கு ஆண்மை இல்லையோ அவர்களே மற்றவர்களை பார்த்து ஆண்மை இல்லை என்பார்கள். முதலில் குருமூர்த்திக்கு ஆண்மை இருக்கிறதா என செக் பண்ணி பார்க்கட்டும் என பதிலடி கொடுத்தார்.
ஜெயகுமாரின் இந்த பதிலடிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி, அமைச்சருக்கு இங்கிலீஷ் தெரியல, நான் சொன்னதுக்கு அர்த்தம் புரியாமல் பேசும் அமைச்சரின் தெருப்பேச்சுக்கு தெருப்பேச்சில் ஈடுபட்டால் அவர் கூறிய பட்டத்துக்கு ஏற்றவனாவேன் என்று கூறியுள்ள அவர், “சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தேன்.
இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாசாரமாகக் கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண் - பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல” பத்திரிகைகளில் impotent என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சாதாரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சரி அவரது விளக்கம் இருக்கட்டும் குருமூர்த்தியின் இந்த டிவிட்டர் பதிவில் ட்விஸ்ட் வச்சது யார்? எதற்காக?
‘ஆடிட்டர் குருமூர்த்தி என்றால் யார், அவருக்கு என்ன முகம்?’ என்று இப்போது கேட்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால். சில மாதங்களுக்கு எடப்பாடி மற்றும் பன்னீர் அணி பிளவு பட்டு கிடந்த சமயத்தில் இரு அணிகளும் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஆடிட்டர் குருமூர்த்தியின் அலுவலகத்தில்தான் மீட்டிங் பாய்ன்ட். அமைச்சர்கள் மணி அன்ட் கோ ஆடிட்டர் அலுவலகம் சென்று அணிகள் இணைப்பு குறித்து ஆடிட்டரின் ஆலோசனைப்படி இணைந்தார்கள்.
யெல்லாம் நல்லாதானே போய்கிட்டு இருக்கு? அப்புறம் எதற்கு ஆடிட்டர் இப்படி லோக்கலா இறங்கிட்டார் ஆடிட்டர்? எல்லாத்துக்கும் காரன் ஆர்.கே.நகர் ரிசல்ட் தான். ஆளும் கட்சி, இரட்டை இலை சின்னம், அதிமுக என்ற பெயர் எல்லாமே இருந்தும் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரிடம் படுதோல்வியை சந்தித்தது. இது கூட பரவாயில்ல எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள்தோறும் இந்த அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என வீராப்பாக, பெருமை அடித்துக்கொண்ட அதிமுக அமைச்சர்களுக்கு ஆர்.கே.நகர் மக்கள் இடைதேர்தல் மூலம் இந்த அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.
இதனால் செம கடுப்பான டெல்லி மேலிடம் தமிழக பாஜகவின் ‘மென்ட்டர்’ என்று கருதப்படும் ஆடிட்டரின் ட்விட்டர் மூலம் ட்விஸ்ட் வைத்து அனுப்பியுள்ளது. தோற்றது என்னவோ சிறு தொகுதி, இடைதேர்தல் தான், ஆனாலும், அதிமுகவையே அலற வைத்து விட்டது.
டெல்லியின் இந்த கோபத்தை ஆடிட்டரின் ட்விட்டர் மூலம் புரிந்துகொண்ட முதல்வரும்- துணை முதல்வரும் வாய் திறக்கத நிலையில், தானாக வந்த சிக்கியிருக்கிறார் அமைச்சர்.