
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டார். அந்த பங்களாவில் கொள்ளை சம்பவம் நடந்ததா என இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாவை அரசு கையகப்படுத்த வேண்டும். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனை போக்க மத்திய அரசிடம் நிதியை பெற்று, போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள், சம்பவங்கள் அனைத்து பாஜகவின் தூண்டுதலால் நடக்கிறது. இதை அனைத்து கட்சியினரும், மக்களும் அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களகவே அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் மேலிடத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் உத்தரவின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத் உள்பட பலர், திருநாவுக்கரசருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன் பாஜகவிலும், அதிமுகவிலும் இருந்தவர் திருநாவுக்கரசர். அதனால் அவருக்கு, பாஜக மற்றும் அதிமுக மீது அதிக அக்கறை உள்ளது. இதனால், தான் அவர்களை பற்றி எவ்வித கண்டன அறிக்கையும் விடவில்லை என கடிந்து கொண்டதாக தெரிகிறது.