
சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் எனவும், ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மார்ச் 16 ஆம் தேதி நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து மார்ச் 23 ஆம் தேதி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தமால் கூட்டம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நான்கு நாட்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசர் ராவுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கவும், மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்கவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு முதலமைச்சர் மற்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உதகையில் உள்ள பூங்காவை பார்வையிட சென்றுள்ளார். பூங்காவை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் எனவும், ஜெயலலிதா திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.