
ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
மருதுபாண்டியரின் 221-வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஓபிஎஸ் இது தொடர்பாக விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா எனக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க;- மடியில் கனமில்லலை..! ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்- விஜயபாஸ்கர்
மேலும் எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரை சந்திப்பதில் தவறு இல்லை என்றார். எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் நடந்துகொள்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் இதுபோல் நடந்துகொள்வது சரியல்ல. எங்க வயசுக்கு நாங்களே கோபப்படுவது இல்லை. அவர் கோபம் கொள்கிறார். ஒரு காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப்போல் உள்ளது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சொல்கின்றனர். எங்கள் சித்தியை பாதுகாப்பதற்காக நான் இதை கூறவில்லை. மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள், பொதுவானவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், ஏன் எங்களுக்கு எதிரானவர்கள்கூட அந்த அறிக்கை உண்மை இல்லை என்று கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிகவும் தவறானது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரின் மரியாதையை குலைக்கும் வகையில் உள்ளது. விஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள் இனிவரும் காலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அஞ்சுவார்கள் என்றார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் காரணம், யாரெல்லாம் அதற்கு அனுமதி கொடுத்தனர் என்பதை பார்த்து, அது யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை. இதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்