திவாகரன் மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டம்! 

 
Published : Jan 17, 2018, 07:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
திவாகரன் மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டம்! 

சுருக்கம்

arumugasamy commission enquiry will take action against divagaran

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா உயிரிழந்து விட்டார் என ஒரு தகவலை திவாகரன் தெரிவித்துள்ளது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று ஆறுமுகசாமி ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது,

முன்னதாகவே தெரிந்திருந்தும் ஜெயலலிதாவின் இறப்பை ஏன்  தாமதமாக அறிவிக்கிறீர்கள் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் தாம் கேட்டதாகவும் அதற்கு, தங்களின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து கேட்டுக் கொண்டதாகவும், அதன் பின்னர் அறிவிக்கலாம் என்று நிர்வாகம் கூறியதாகவும் திவாகரன் பேசியுள்ளார்.

2016 செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, 75 நாள் சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால், அவருக்கு டிசம்பர் 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாம். இந்தத் தகவல் மட்டும் வெளியான நிலையில், டிசம்பர் 5ம் தேதிதான் அவர்  இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. 

இதனிடையே, ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக  ஊடகங்களில் ஒரு செய்தி கசிந்தது. அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .இதனிடையே, அப்பலோ நிர்வாகம் அறிவிக்கும் முன்னரே, இரங்கல் குறிப்பும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியானது.  இதனால், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவிக்கப் பட்டது. இதனால் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.  

இன்று, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்,  ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கு இறந்துவிட்டார். ஆனால் அவரது மரணம் குறித்து டிசம்பர் 5ஆம் தேதிதான் அறிவிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம்  உறுதியாக இருந்தது.  மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனை பல இடங்களில் இருக்கின்றன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். அதன் பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து வெளியில் அறிவிக்கலாம் என்றனர் எனப் பேசினார். 

முன்னதாக, தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போல் ஒரு காட்சி இருந்தது. வெற்றிவேலின் இந்தச் செயலுக்கும் தேர்தல் ஆணையமும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் திவாகரனின் பேச்சு மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!