Seeman slam dmk : அதிகாரத் திமிர்.. ஆட்சி தந்த மமதை.. தம்பிகள் மீதான தாக்குதலுக்கு முஷ்டி முறுக்கும் சீமான்!

By Asianet TamilFirst Published Dec 21, 2021, 11:23 PM IST
Highlights

வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதே வகையிலான வன்முறையையும், ஜனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது.

அதிகாரத் திமிரில் ஆட்சி தந்த மமதையில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயலைக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கண்டன ஆர்ப்பாட்டம் பாதியிலேயே முடிந்தது. இந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தருமபுரி மாவட்டத்தில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை கோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக் கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதே வகையிலான வன்முறையையும், ஜனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல் துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது. நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!