நடிகர் ரஜினிகாந்தால் அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுனா மூர்த்தி பிப்ரவரி மாத இறுதியில் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜூன மூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் ஒரு மாதம் கட்சி பணியாற்றிய நிலையில். ரஜினி கட்சி தொடங்குவதிலிருந்து பின்வாங்கினார். இதனால், ரஜினி ரசிகர்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இணையத் தொடங்கினர். இதற்கிடையே அர்ஜூன மூர்த்தி புதிய கட்சி அறிவிக்கும் முடிவை வெளியிட்டார். “ரஜினி ரசிகர்கள் தனது கட்சியில் இணைய நிர்பந்திக்கமாட்டேன். அவர்களாக வந்தால் மகிழ்ச்சி” என அர்ஜூனமூர்த்தி தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த மாதம் அவர் பேட்டி அளிக்கையில், “ரஜினி கட்சி தொடங்கும்போது பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தேன். ஆனால் அவற்றை செயல்படுத்த முடியாத நிலையில் நானே புதிய கட்சி தொடங்கி மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அர்ஜுனமூர்த்தி டெல்லியில் தனது புதிய கட்சியைப் பதிவு செய்துவிட்டு சென்னை திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 27 அன்று புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் ஆயத்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.