நாங்க மட்டும்தான் கூட்டணி மாறுகிறோமா.? கூட்டணியே மாறாத கட்சி தமிழகத்தில் இருக்கா.? கேட்கிறார் ஜி.கே.மணி.!

By Asianet TamilFirst Published Aug 30, 2021, 9:32 PM IST
Highlights

தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமல் உள்ள வேறு அரசியல் கட்சிகள் எது எனக் கூறுங்கள்? என்று  பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ஜி.கே.மணி தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “'தண்ணீருக்காக கையேந்தும்  கடைமடை மாநிலமாகத் தமிழகம் அமைந்துவிட்டது. எனவே, தமிழகத்தைக் காக்கும் வகையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த வேண்டும் என பாமக தமிழக அரசை வலியுறுத்துகிறது. இதற்காக நீரியல் வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். நம் மாநில மண்ணில் விழும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் நம் மண்ணை வளப்படுத்த உதவும் வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் உரிமையையும் காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் உரிமையையும் காக்க தமிழகம் உறுதியாக நிற்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளித்த பிறகும் காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுபோன்ற நிலையில்தான் மேகேதாட்டு அணையை காவிரியின் குறுக்கே கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு விதண்டாவாதம் செய்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். 
இதே உறுதியுடன் எல்லோரும் ஒருமித்து நின்று மேகேதாட்டு அணைக்கு எதிரான நமது கருத்தை கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க வேண்டும். அதை முழு அடைப்பு வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ அறப் போராட்டம் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிக கவனத்துடன் கொரோனா விதிகளை மீறாமல் நடந்திட வேண்டும். பள்ளித் திறப்பின் மூலம் ஒரு குழந்தைக்குக் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இதில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். 
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிடுவதாகத் தகவல் வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு அவசரம் காட்ட வேண்டாம். அவர்கள் சிறு குழந்தைகள் என்பதால் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும். சிறு தானிய உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்திருப்பதை பாமக வரவேற்கிறது. தற்போதும் பாமக அதிமுக கூட்டணியில்தான் தொடர்கிறது. தேர்தலுக்குத் தேர்தல் வேறு வேறு கட்சிகளுடன் பாமக கூட்டணிக்குச் செல்வதாக விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமலே உள்ள வேறு அரசியல் கட்சிகள் எது எனக் கூறுங்கள்?” என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
 

click me!