உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ..? உருகும் வைரமுத்து..!

Published : May 10, 2021, 06:55 PM ISTUpdated : May 10, 2021, 06:57 PM IST
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ..? உருகும் வைரமுத்து..!

சுருக்கம்

ஈழத்தின் இனப்படுகொலையினையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலைமையினையும் அவர்களின் மன வலியினையும் ‘தமிழ் ஈழக் காற்றே..’ என்ற பாடலாக வடித்து, அதை காட்சிப்பாடலாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.  

ஈழத்தின் இனப்படுகொலையினையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலைமையினையும் அவர்களின் மன வலியினையும் ‘தமிழ் ஈழக் காற்றே..’ என்ற பாடலாக வடித்து, அதை காட்சிப்பாடலாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு

உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?

நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?

ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்
படித்த அணில்கள் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!

பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?

வன்னிக் காடுகள் சுகமா? – எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்
காயாத குருதியும் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

எனும் அந்தப்பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘தமிழ் ஈழக் காற்றே’
கண்டும் கேட்டும்
நீங்கள்
குரல்வழி அழுவது
என் விரல்வழி வழிகிறது.

நாட்படு தேறல்
உலகத் தமிழரிடையே
உரையாடலாகட்டும்;
என்மீது பூச்சொரியட்டும்;
அல்லது
என் சதையைப் பறித்து
என்மீது எறியட்டும்.

எது நிகழினும்
மேன்மையுறுவது தமிழே.

நன்றி.
என்று தெரிவித்து இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?