
சென்னையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சசிகலாவை இன்று திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விஜயசாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சையில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாஜக எம்.பி. சந்தியா ராய், முன்னாள் எம்.பி.யும் தேசிய செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமித்திருந்தது. அதன்படி இக்குழு அரியலூர், தஞ்சாவூருக்கு நேற்று சென்று விசாரணையை நடத்தியது. இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு விஜயசாந்தி சென்னை திரும்பினார். இந்நிலையில் விஜயசாந்தி சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்துக்கு இன்று சென்றார். அங்கு சசிகலாவைச் சந்தித்து பேசினார்.
சசிகலாவுடன் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த விஜயசாந்தியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது விஜயசாந்தி கூறுகையில், “எப்போது சென்னை வந்தாலும் நான் சசிகலாவை சந்திப்பேன்; எங்கள் நட்பு எப்போதும் போல தொடரும். நான் அவர்கள் வீட்டு பெண் போல. ஜெயலலிதா, சசிகலா என இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்துக்கு வந்த பணிகள் எல்லாம் முடிந்துவிட்டன. அதனால்தான் இறுதியாக சசிகலாவை இன்று சந்தித்தேன். அரசியல் ரீதியாக சசிகலாவிடம் நான் எதுவும் பேச வில்லை, நட்பு ரீதியால் மட்டுமே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலைப் பொறுத்தவரை மக்களுக்கு யார் யார் நல்லது செய்தார்களோ அவர்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் நல்லது நடந்திருக்கும்.
அரசியலில் ஜெயலலிதா, சசிகலா என இருவருமே கஷ்டப்பட்டு வந்தவர்கள். அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதாகவே நடக்கும். தஞ்சை மாணவி விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் என்னிடம் ஏதும் கேட்கவில்லை” என்று விஜயசாந்தி தெரிவித்தார்.