லாக்டவுனில் பவர் கட் ஆச்சுன்னா இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்... மின்சாரத்துறை புகார் எண் வெளியீடு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2021, 7:36 PM IST
Highlights

அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்கமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் நாளை முதல் ஒருவாரத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். 

ஆலோசனை குறித்து மின்சாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் 31.05.2021 வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின் போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்/ பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்பொழுது கோடைமழை பெய்து வருவதால் மின்தேவைகள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், தற்பொழுது காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்காலிக மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலமுறை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக பொது மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்தி வெளியீடுகள் வெளியிடப்படவேண்டும் எனவும், சராசரி மின் இழப்புகளை குறைப்பதற்கு  தேவையான நடவடிக்கைளை மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மின்தளவாட பொருட்கள் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) செயிலி எண் 24 மணி நேரமும் செயல்படும். பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்கள் தொடர் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மின்தடை தொடர்பான விவரங்களை உரிய பதிவேடுகளில் பணியில் உள்ள அலுவலர்கள் முறைய பதிவு செய்து பராமரித்திட வேண்டும். களப்பணிகளை ஆய்வு செய்திட பணிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கூறிய பதிவேடுகளை தணிக்கை செய்திட வேண்டும். களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களும், முகக்கவசம், கையுறை மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு பணிசெய்திட வேண்டும் எனவும் குறிப்பாக கட்டுபடுத்தபட்ட (Containment) பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்கமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார். கொரானா தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்றிடவும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் சானிடைஸ்சர் வழங்கிடுமாறு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். 

click me!