ஆழம் தெரியாமல் காலைவிட்ட அண்ணாமலை.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ArrestAnnamalai ..!

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2022, 3:18 PM IST
Highlights

எனவே உண்மைக்கு புறம்பாக தகவல் பரப்பிய  அண்ணாமலை மீது கிரிமினல் சதி,  மத கலவரத்தை உருவாக்க சதி செய்தல், ஆதாரங்களை மறைத்தல், வகுப்புவாத கலவரத்தை  உருவாக்கும் நோக்கத்துடன் தவறான செய்திகளைப் பரப்புதல் மற்றும் ஐடி சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்தான் பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்

அரியலூர் மாணவி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி பதற்றத்தை உருவாக்கிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டுமென சமூக வலைத்தளத்தில் #arrestAnnamalai என்ற  ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அண்ணாமலை மீது கிரிமினல் சதி, மதக்கலவரத்தை உருவாக்குதல், ஆதாரங்களை திரித்துக் கூறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசுக்கு எதிரான பாஜகவின் பிரச்சாரம் அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது என்றும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தனியார் விடுதியில் தங்கிப் படித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த மாணவி கிறிஸ்துவ நிர்வாகத்தின் கீழ் தங்கி படித்து வந்தார் என்றும், அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாற வேண்டும் என வற்புறுத்தப்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியதுடன், மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்திலும் குதித்தனர்.

Latest Videos

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் இவரது  மக்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது, அந்த வீடியோ அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மாணவியை மதம்மாற கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மன உளைச்சலில் மாணவி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. அந்த குறிப்பிட்ட வீடியோ மாணவி மருத்துவமனையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் குரல் எழுப்பினர். தமிழகத்தில் மதமாற்றம் வெளிப்படையாக நடக்கிறது என்றும், இதை அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும், உயிரிழந்த மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நீட் தேர்வில் உயிரிழந்த அனிதாவுக்காக பொங்கியவர்கள் ஏன் லாவண்யாவுக்கு பொங்கவில்லை என கடும் விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்தனர். மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்ட வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் தமிழக அரசின் மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். தமிழகத்தில் விரைந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் லாவண்யாவின் மரணத்தை தமிழக பாஜக அரசியல் ஆக்குகிறது, மதமாற்றும் முயற்சியால்தான் மாணவி உயிரிழந்ததாக பாஜக இட்டுகட்டி பிரச்சாரம் செய்கிறது என ஆளும் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வந்தன. இதே நேரத்தில் சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிபந்தனைதான் அவரின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டினார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்ற வேண்டும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும், தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய  வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாணவியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்நிலையில்தான் இந்த வழக்கில் திடீர் திருப்புமுனையாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அம்மாணவி கூறியுள்ள தகவல் பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேர் எதிராக உள்ளது. " நான் தான் முதல் மதிப்பெண் பெறுவேன், ஆனால் எனது குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக சொல்ல முடியவில்லை, பள்ளிக்கு காலதாமதமாகதான் செல்வேன், அதனால் அங்குள்ள சிஸ்டர்கள் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள், ஆனால் நான் படிக்க வேண்டும் என்று கூறும் போது அவர்கள் என்னை விடமாட்டார்கள். நான் சரியாக எழுதினாலும் தப்பு தப்பு என்று கூறுவார்கள். ஒரு மணி நேரம் என்னை உட்கார வைத்து விடுவார்கள். அதனால் மதிப்பெண் குறைவாக எடுத்ததினால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை என்பதால் விஷம்  குடித்தேன் என கூறியிருந்தார்.

மேலும் பொட்டு வைக்கக் கூடாது என எப்போதும் அவர்கள் வற்புறுத்தியது இல்லை என்றும் அவர் அதில் கூறியுள்ளார். எனவே மாணவி மதம் மாற சொன்னதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில்தான் சமூக வலைதளத்தில் பலரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். பொய்யான தகவலை பரப்பி, சமூகப் பதற்றத்தை உண்டுபண்ண முயற்சித்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி சிறுமி தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய வீடியோவில் கட்டாய மதமாற்றம் செய்ய துன்புறுத்தப்பட்டார் என்பதை அந்தப் பெண் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நான்கு நிமிட அந்த வீடியோவில் செந்தூர் பொட்டு அழிக்க தன்னிடம் ஒருபோதும் யாரும் வற்புறுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த முழு வீடியோவில் உள்ள விஷயத்தை நன்கு அறிந்திருந்தார். ஆனால் அதையெல்லாம் மறைத்து அவர் திருக்காட்டுப்பள்ளி சேக்ரட் ஹார்ட் பள்ளியில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ஹாஸ்டலில் இருந்த சிஸ்டர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி 1098  என்ற குழந்தை உதவி எண்ணுக்கு சிறுமி புகார் தெரிவித்ததும் அண்ணாமலைக்கு தெரியும், எனவே உண்மைக்கு புறம்பாக தகவல் பரப்பிய  அண்ணாமலை மீது கிரிமினல் சதி,  மத கலவரத்தை உருவாக்க சதி செய்தல், ஆதாரங்களை மறைத்தல், வகுப்புவாத கலவரத்தை  உருவாக்கும் நோக்கத்துடன் தவறான செய்திகளைப் பரப்புதல் மற்றும் ஐடி சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்தான் பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.. இந்நிலையில் #arrestAnnamalai என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
 

click me!