புலி வால் பிடித்த அண்ணாமலை .. ஆக்ஷன் நாயகி விஜய சாந்தியை களத்தில் இறக்கிய ஜெ.பி நட்டா.. பகீர் பின்னணி என்ன.?

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2022, 12:05 PM IST
Highlights

அதற்கு நேர் எதிராக கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்கிறார்கள் என தமிழக பாஜக அவர்களை குற்றம் சாட்டுவது, அதிக கிறிஸ்தவ வாக்குகளைக் கொண்ட கோவா மாநில தேர்தலில் எதிரொலிக்ககூடும் என பாஜக தேசிய தலைமை அஞ்சுகிறது

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாறி மாறி வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அது குறித்து முறையாக விசாரித்து அறிக்கை அனுப்ப நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார்.

மாணவி எந்த இடத்திலும் தான் மதமாற்றம் செய்ய வற்புறுத்த பட்டதாக கூறாத நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவியை மதமாற்றம் செய்ய நிர்ப்பந்தித்தது என பாஜக பிரச்சாரம் செய்து  வருவதாகவும், தமிழகத்தில் சமூக பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபட்டிருப்பதாகவும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில்தான் நட்டா இந்த குழுவை அமைத்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல்  அக்கட்சிக்கு உள்ளும், வெளியிலும் பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த கே.டி ராகவன் பாலியல் வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அந்த வீடியோ வெளியிட்ட மதன்  ரவிச்சந்திரனை அண்ணாமலை சரியாக கையாளவில்லை, அண்ணாமலை நினைத்திருந்தால் அதை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என அப்போது கட்சிக்குள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. காலப் போக்கில் அந்த பிரச்சனை கரைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு  சர்ச்சையில் அண்ணாமலை சிக்கியுள்ளார். 

அதாவது #arrestAnnamalai  என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அதாவது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை அண்ணாமலை சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார் என்பதுதான் இதற்கு காரணம். 

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள்,  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுக்கு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது, அதில் பள்ளி நிர்வாகம் மாணவியை  மதம் மாற கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக மன உளைச்சலில் மாணவி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. அந்த வீடியோவை முதன்முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான், அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது, தமிழகத்தில் மதமாற்றம் வெளிப்படையாக நடக்கிறது, இதை அரசும் வேடிக்கை பார்க்கிறது, உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல பாஜக தலைவர்கள் அதை விமர்சித்து வந்தனர்.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்கு பொங்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் திருகாட்டு பள்ளி மாணவியை கண்டுகொள்ளவில்லை என்றும் ஆவேசம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில் பாஜக தலைவர்கள் தமிழக அரசை மிக கடுமையாக விமர்சித்தனர். தமிழகத்தில் விரைந்து கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தை ஆரம்ப முதலிலிருந்தே விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாணவி விவகாரத்தை பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறது. தமிழகத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்று எச்சரித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி பேசிய முழு வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் அந்த மாணவி எந்த இடத்திலும் தான் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாக கூறவில்லை.

கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார் என்பதையும் அந்த மாணவி திட்டவட்டமாக மறுத்திருந்தார். செந்தூர் போட்டு அழிக்க தன்னிடம் யாரும் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். ஆனால் தன்னால் சரியாக தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை அந்த விரக்தியில் தான் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவே அவர் கூறியிருந்தார். அக மதமாற்றம் செய்ய சொல்லி அந்த மாணவியை எவரும் துன்புறுத்தவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.

எனவே மாணவியின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைத்து பாஜக அரசியல் செய்தது பின் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில்தான் நெட்டிசன்கள் பலரும் தமிழகத்தில் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்ட அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என கூறி #arrestAnnamalai என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கினர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி சிறுமி தொடர்பான வெளியான புதிய வீடியோவில் கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார் என்பதை அந்த மாணவி மறுத்துள்ளார்.

சேக்ரட் ஹார்ட் பள்ளியில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். எனவே உண்மைக்கு புறம்பாக தகவல் பரப்பிய அண்ணாமலை மீது கிரிமினல் சதி, மதக்கலவரம் உருவாக்க சதி செய்தல் . ஆதாரங்களை மறைத்தல், வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தவறான செய்தியை பரப்புதல், ஐடி சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இப்படி மாநிலம் முழுவதும் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திருகாட்டுபள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மாணவி பேசிய பல்வேறு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை களத்திற்கு சென்று ஆராய்ந்து அறிக்கை வழங்க 4 மாநிலங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அதில் பாஜக எம்.பி சந்தியா ராவ், கட்சித் தலைவர்கள் விஜயசாந்தி, சித்தராவாக், கீதா விவேகானந்தா ஆகியோர் அந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

ஜே.பி நட்டா குழு அமைத்துள்ளதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், மாணவி தற்கொலை விவகாரத்தை தமிழக பாஜக கையான்ட விதம் அக்கட்சியின் தேசிய தலைமை விரும்பவில்லை. 5 மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துவ, இஸ்லாமியர்களை குறி வைக்கும்  இந்த விவகாரத்தை டெல்லி தலைமை ரசிக்கவில்லை எனக் கூறியுள்ளார். 

பாஜக ஒருபோதும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி அல்ல என்ற தோற்றத்தை கட்டியெழுப்ப பாஜக தேசிய தலைவர்கள் முயற்சித்து வரும் நிலையில்  அதற்கு நேர் எதிராக கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்கிறார்கள் என தமிழக பாஜக அவர்களை குற்றம் சாட்டுவது, அதிக கிறிஸ்தவ வாக்குகளைக் கொண்ட கோவா மாநில தேர்தலில் எதிரொலிக்ககூடும் என பாஜக தேசிய தலைமை அஞ்சுகிறது அதேபோல் இந்ந விவகாரம் புலி வால் பிடித்த கதையாகி விட்டதால்  இதை எப்படியாவது கட்சிக்கு பாதிப்பு இல்லாமல் சுமூகமாக முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே நட்டா இந்த புதிய குழுவை அமைத்திருக்கிறார். இந்த குழுவில் அனைவரும் வெளிமாநிலங்களில் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமை மீது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மாணவி விவகாரம் அண்ணாமலையின் கைமீறி போனதால்தான் ஜேபி நட்டா இதில் தலையிட்டு இருக்கிறார் என அதில்  சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!