
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது அது திரும்ப அனுப்பப்பட்டு இருக்கிறது. நாளை நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் என்.சதிஷ், ‘CM SIR HELP ME’ என்ற பதாகையுடன் சந்தித்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார். மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது.
ஆகையால் உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் மாணவர் சதிஷ். அதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அம்மாணவனிடம், 'நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, அகில இந்திய அளவிலும் இதற்காகத்தான் குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அம்மாணவரும், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.