
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படையினர் மீது கோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கடந்த 24-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.
இலங்கை கடற்படை மீது நடவடிக்கை
அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது. தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அமைச்சரானதும் முதல் முறையாக டெல்லிக்கு சென்ற உதயநிதி..! மோடியை சந்திக்க திட்டமா.? ஆச்சர்யத்தில் பாஜக